Tuesday, February 04, 2014

சம்பங்கி சாகுபடி விவசாயிகளுக்குரூ.21 லட்சம் மானியம்

திருவாலங்காடு:ஒன்றியத்தில் சம்பங்கி பூ சாகுபடி செய்யும், 47 விவசாயிகளுக்கு, 21.78 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்தில், திருவாலங்காடு, வீரராகவபுரம், கணேசபுரம், புளியங்கொண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம், ஜாகீர்மங்கலம் ஆகிய பகுதிகளில், 80 எக்டேர் பரப்பளவில் சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளது.உயர் தொழில்நுட்ப உற்பத்தி திறன் திட்டத்தின் கீழ், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு, 7,500 ரூபாய் வீதம், தோட்டக் கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப் படுகிறது.அதன்படி, 2011-12ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், 47 விவசாயிகளுக்கு மானியமாக, 21.78 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இவ்விழா திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ரஞ்சன்பால், ஒன்றிய சேர்மன் குணாளன் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
thanks to dhinamalar

அலங்காநல்லூர் பகுதியில் சம்பங்கி பூ சாகுபடி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் ரோஜா, மல்லிகை, கேந்தி, கோழிக்கொண்டை உள்பட பல பூ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
 
இதில் பாலமேடு, குட்டிமேக்கி பட்டி, தாதக்கவுண்டன் பட்டி, முடுவார்பட்டி, கொண் டையம் பட்டி, வலசை, எர்ரம்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
 
முக்கிய பங்கும், தனி கிராக்கியும் கொண்ட சம்பங்கி பூவும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் திருமணம், திருவிழா நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதால் இந்த கமகமக்கும் சம்பங்கி பூ மாலைக்கும் தனி மவுசு உண்டு.
 
இந்த பூவுக்கு நல்ல விலை கிடைப்பதோடு அரசின் மானியமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,500-க்கு உர வகைகளும் ரூ.7,500-க்கு பராமரிப்பு செலவுக்கு வழங்கப்படுவதால், விவசாயிகள் இந்த பூவை ஆர்வத்துடன் விரும்பி நடவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

சம்பங்கி மலர் சாகுபடி

பெங்களூரு அசர்கட்டா தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் ரகங்கள் ஸ்ரீகாசி, சுகாஷினி, பிராஜ்வால், வைபோவ். பட்டம்- மே, ஜூன், ஜூலை மாதங் கள். ஒரு ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப் படும். எல்லா வகை மண் ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண் ணில் வளரக் கூடியது. தொழு உரம்ஏக்கருக்கு20 டிப்பர் இட்டால் போதும். மேல் உரமாக 20,20:0:13 அல்லது இயற்கை வழி உரமானதழை, மணி சத்துக்கள் கொண்ட உர வகைகளை இடவேண்டும். நிலத் தின் தன்மைக்கு ஏற்பவும், நல்ல வடிகால் வசதி உள்ள வாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சம்பங்கி ஒரு கிழங்கு வகை பயிராக இருப்பதால் மழைக் காலங்களில் கிழங்கு அழுகல் வரும். இதற்குசூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி ஆகிய உயிர் உரங்களை இட்டு பாதுகாக்க வேண்டும். நட்ட 3 மாதங்களில் ஒரு சில இடங் களில் அங்கொன்றும் இங் கொன்றும் வரும். 9 மாதத் தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூ மகசூல் வரும்.

வீரிய சம்பங்கி:

விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதி கம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.
நாட்டு சம்பங்கி: விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. மேலும் விபரங்களுக்கு: 9787119420

சம்பங்கி + விரிச்சிப் பூ... லாபக் கூட்டணி


பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்கள் விளைநிலங்களையே ஆராய்ச்சிக் களங்கள் என மாற்றி, பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு.. தங்களுக்கான தொழில்நுட்பங்களையும், புதிய யுக்திகளையும் கண்டுபிடிப்பது வழக்கம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அத்தகையோரில் ஒருவர்.
இவர், விரிச்சிப் பூ செடிகளுக்கிடையே, சோதனை முயற்சியாக சம்பங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சுந்தர்ராஜை சந்தித்தபோது.. மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. ஒன்றரை ஏக்கரில் சம்பங்கி, 40 சென்ட்டில் செண்டுமல்லி என்று சாகுபடி செய்கிறேன். மீதி இருக்கும் 60 சென்ட்டில்தான் விரிச்சியும் அதில் ஊடுபயிராக சம்பங்கியும் போட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்த வரைக்கும் விரிச்சியில், யாரும் சம்பங்கியை ஊடுபயிராக போட்டதில்லை. மூன்று வருடத்திற்கு முன் சோதனை முயற்சியாக... 20 சென்ட்டில் மட்டும் இரண்டையும் பயிர் செய்தேன். அதில் இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பங்கியிலேயே வருமானம். இப்போது விரிச்சியில் தினமும் பத்து கிலோ அளவிற்கு பூ கிடைக்கிறது. அது மூலமாக தினமும் 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு பயிரும் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து நல்ல மகசூல் கிடைப்பதால்.... அடுத்த 40 சென்ட்டிலும்  இந்த இரண்டையுமே போட்டிருக்கிறேன்.
களைகளைக் கட்டுப்படுத்த பாலிதீன்!
சாகுபடி நிலத்தில் 4 சால் உழவு ஓட்டி, 40 சென்ட் நிலத்திற்கு 10 டன் மாட்டு எரு என்ற கணக்கில் போட்டு, மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும். இரண்டே முக்கால் அடி அகலம்,  முக்கால் அடி உயரம் என முக்கால் அடி இடைவெளியில், பார்களை அமைக்க வேண்டும். பாரின் மீது 3 அடி அகலம் கொண்ட பாலிதீன் விரிப்புகளை விரித்து... அதன் மேல் 20 அடி இடைவெளிக்கு ஒரு சுழலும் திறப்பான் உள்ளவாறு தெளிப்பு நிர்ப் பாசனம் அமைக்க வேண்டும். நடவு மற்றும் விதைப்பு செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் 3 இஞ்ச் குழாய் ஒன்றைப் பயன்படுத்தி பாலிதீன் விரிப்பில் துளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், களைகள் வளர்வதேயில்லை.
பாரின் நடுவில் 8 அடி இடைவெளியில் விரிச்சி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில்  சம்பங்கிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலலை வடிகட்டி தெளிப்பு நீர் வழியாகத் தர வேண்டும்.
30-ம் நாள் தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். 40 –ம் நாள் ஒரு கிலோ ட்ரைக்கோ டெர்மாவிரிடியை 50 கிலோ மாட்டு எருவில் கலந்து, செடிகளைச் சுற்றிலும் தூவ வேண்டும். 50-ம் நாள் அரை லிட்டர் தேங்காய் பாலில் 3 லிட்டர் மோர், ஒரு கிலோ வெல்லம் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து... அதோடு ஒரு கிலோ சூடோமோனஸ், 50 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடியின் வளர்ச்சி வேகமெடுப்பதோடு, பூஞ்சணத் தாக்குதலும் கட்டுப்படும்.
65-ம் நாளில் இருந்து இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். சம்பங்கயில் 65-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும். 100 –ம் நாள், 200 கிலோ மண்புழு உரத்தை செடிகளின் தூரில் தூவ வேண்டும். 120-ம் நாள் 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும். 130-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
10 வருடம் வரை விரிச்சி!
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம். அதற்குப் பிறகு விரிச்சிச் செடிகள் நாலரையடி உயரத்திற்கு வளர்ந்து படர ஆரம்பிக்கும். அப்போது நிழல் கட்டிடுவதால் சம்பங்கியில் மகசூல் நின்றுவிடும். அப்போது சம்பங்கிச் செடியை அடிக்கிழங்கோடு பிடுங்கி, இலை, குச்சிகளை வெட்டிவிட்டு விதைக்கிழங்காக விற்றுவிடலாம். விரிச்சி மூலமாக 10 வருடம் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.11.12 www.vikatan.com

Monday, February 03, 2014

திருப்புத்தூரில் "சம்பங்கி' சாகுபடி

திருப்புத்தூர்,: திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.திருப்புத்தூர் பகுதியில் சம்பங்கிப் பூ சாகுபடி நடைபெற்றதில்லை. தற்போது, நெற்குப்பை பொசலான் என்ற விவசாயிதோட்டத்தில் சம்பங்கி சாகுபடித் துவக்கியுள்ளனர். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மலர்கள் உற்பத்தி திறன் அதிகரிக்க, இரண்டரை ஏக்கருக்கு, ரூ 45 ஆயிரம் மானியத்துடன் இச்சாகுபடியை தோட்டக்கலைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மூன்று மாதத்தில் பூக்கும் சம்பங்கிச் செடி சாகுபடிக்கு, முதலில் மண் உழவு செய்து, பின்னர், தொழு உரம்,குப்பையிட்டு உழவு செய்ய வேண்டும். பின்னர் அரை அடிக்கு முக்கால் அடி பாத்தி கட்டி, அதில் முக்கால் அடி இடைவெளியில் கிழங்கை நடவேண்டும். ஏக்கருக்கு 40 ஆயிரம் கிழங்குகள் தேவைப்படும்.அடுத்த, 15நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் டி.ஏ.பி. உரம் இடவேண்டும்.அடுத்த 20 நாட்களில்மேல் உரமாக பொட்டாஷ் இடவேண்டும்,மேலும்,யூரியா,வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம். வாரத்திற்கு இரண்டு தண்ணீர் விட வேண்டும். 90 நாட்களில், பூக்க துவங்கும். ஏக்கருக்கு 10 கிலோ வரை பூக்கும்.வாரத்திற்கு ஒரு முறை பறிக்கலாம்.மூன்று ஆண்டுகள் வரை பூக்கும். குறைவான தண்ணீர்,பராமரிப்பு செலவு கொண்ட சம்பங்கிப் பூ, திருப்புத்தூர் போன்ற பாசன வசதி குறைவான, மணல் கலந்த கரிசல் மண் மற்றும்
செம்மண் பகுதி விவசாயிகளுக்கு பலன் தரும் என்று தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர்.
விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர்: 94436 20082, உதவி வேளாண் அலுவலர்: 9486276303 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
thanks to dinamalar

சம்பங்கி சாகுபடியில் தினமும் ரூ. 500 வருவாய் முகாசிபுலவன்பாளையம் பஞ். தலைவி சாதனை

சென்னிமலை: ஒரு ஏக்கர் சம்பங்கி மலர் சாகுபடி செய்து, தினமும், 500 ரூபாய்
வரை வருவாய் பார்க்கிறார் முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவி ராதிகா.
சென்னிமலை யூனியன், முகாசிபுலவன்பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்
ராதிகா; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தல் வரை தீவிர
விவசாயியாகத்தான் இவரை, அனைவருக்கும் தெரியும். காய்கறி, மஞ்சள், வாழை,
கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவர், எட்டு மாதங்களுக்கு
முன், தோட்டக்கலை துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரில், ஒரு ஏக்கரில்
சம்பங்கி மலர் சாகுபடி செய்தார். தற்போது, சம்பங்கி மலர்கள்
பூத்துக்குலுங்கி மணம் வீசுகிறது.
தினமும் காலை 5 மணிக்கே சம்பங்கி மலர் அறுவடையை துவக்கி விடுகிறார். பத்து
கிலோ வரை அறுவடையாகிறது. கிலோ 50 ரூபாய்க்கு, வெள்ளோடு பூவியாபாரிகள்
வாங்கிச் செல்கின்றனர். பூ வியாபாரத்தில் தினமும், 500 ரூபாய் வரை வருமானம்
பார்த்து வருகிறார் ராதிகா.
அவர் கூறியதாவது:மற்ற பயிர்களை விட, அதிக வருமானம் தரும் தோட்டப்பயிராக
சம்பங்கி உள்ளது. தேர்தல் சமயத்தில் வயலை சரியாக பராமரிக்கவில்லை அதனால் பூ
அறுவடை குறைந்துள்ளது. நன்றாக பாரமரிப்பு செய்திருந்தால், தினமும் 15 கிலோ
வரை பூ கிடைக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் விதை கிழக்கு எடுக்கலாம்.
அது, 15 ரூபாய் வரை விலை போகிறது. சம்பங்கி சாகுபடி செய்து கொஞ்சம்
உழைத்தால் போதும்; நல்ல வருமானம் பார்க்க முடியும், என்றார்.சம்பங்கிக்கு
மானியம்
சென்னிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:வாசனை
திரவியம், மாலை, பூச்செண்டு தயாரிக்க, சம்பங்கி மலர்கள் பெருமளவில்
பயன்படுகிறது. இப்பூக்கள் இரண்டு வாரம் வரை வாடாது. ஏற்றுமதிக்கு ஏற்ற
மலர். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பயிர் செய்யலாம், அனைத்து வகையான
நிலங்களிலும் வளரும்.

ஹெக்டேருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சாகுபடி
செலவாகும். முதல் ஆண்டில், 20 டன் மகசூலும், இரண்டாம் ஆண்டில், 25 டன்
மகசூலும் கிடைக்கும். தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தில், சம்பங்கி
சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 45 ஆயிரம் ரூபாய் மானியம்
வழங்கப்படுகிறது, என்றார்.
thanks to dinamalar

தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி

காஞ்சிபுரம்:தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கிபூ சாகுபடி செய்வதன் மூலம், நல்ல லாபம் பார்க்க முடிகிறது என, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ளது சேந்தமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை,38. இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம், "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கிபூ சாகுபடி செய்துள்ளார். நடவு செய்த, 90வது நாள் முதல் பூக்கத் துவங்கும், நன்கு பராமரிக்கப்பட்டால், நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து பூக்கும்.
பாசன அமைப்பு
ஐந்து அடி உயரத்தில் பைப்புகள் நின்ற நிலையில் பொருத்தி, அதன் மேல் பகுதியில், தண்ணீர் வெளியில் வரும் கையில், "பட்டர்பிளை ஸ்பிங்லர்' சுழல்கள் அமைக்கப்பட்டிருக்கும். குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் போது, பட்டர்பிளை ஸ்பிங்லர் சுழன்று தண்ணீரை தூவும். 
சம்பங்கி சாகுபடிக்கு நிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டும் போதும், செடி வீரியமாக வளரும். பட்டர்பிளை ஸ்பிங்லர் அமைக்க ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவாகும். நடவு செய்த அதே ஆண்டில் லாபத்தை ஈட்ட முடியாது.
இதுகுறித்து விவசாயி ஏழுமலை கூறுகையில், "வெளியூர் சென்றபோது, அங்கு தெளிப்பு நீர் பாசனத்தில் சம்பங்கி சாகுபடி செய்வதை பார்த்தேன். இதனால், அதேமுறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 
இதற்கான, "பிரிஞ்சிவால் ஹை பிரீட்' ரக சம்பங்கி விதையை வாங்கி வந்து நடவு செய்தேன். இதற்கான செலவு, மற்ற பயிர்களைவிட கூடுதலாக தான் உள்ளது என்றாலும், லாபமும் அதிகம் தான்.
அதிக லாபம்
மேலும், பூவின் அளவும் பெரியதாகவே உள்ளது. அறுவடை செய்யப்படும் பூ, கிலோ 60 ரூபாய் முதல் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு விற்பனைக்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைக்கிறேன். முகூர்த்த நாட்கள், திருவிழாக் காலங்களில், கிலோ 250 ரூபாய் வரையில் விற்கிறேன். 
இந்த சாகுபடி முடிந்து, வேறு பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என்றால், தெளிப்பு நீர் பைப்புகளை சேதாரமில்லாமல் அகற்றிவிட்டு, நிலத்தை நன்கு உழுதபின் மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இந்த தெளிப்பு நீர் பாசனத்தில், அனைத்து விதமான பயிர்களை சாகுபடி செய்யலாம்,' என்றார்.
thanksto dhinamalar

குண்டுமல்லி

இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.
ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை 4 அடி இடைவெளியில் எடுத்து (ஏக்கருக்கு 2500 குழிகள்) 5 மாத வயதான நாற்றுக்களை குழிக்கு இரண்டாக பதியம் போட்டு மூடி உடனே நீர்பாய்ச்ச வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம்தங்கச்சிமடம்பகுதியிலிருந்துதான் தமிழகம் முழுவதும் மல்லி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி வந்து நடுகிறார்கள் என்கிறார் விவசாயி. நாற்றின் விலை ஒரு ரூபாய்.

நடவு முடிந்ததும் வாரம் ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். முதல் 5 மாதத்திற்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 2 வது மற்றும் 5வது களைக்குப்பின் செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒரு முறை 500 லிட்டர் கோ மூத்திரத்துடன் 50 கிலோ சாணத்தைக் கரைத்து பாசனத்தண்ணீரோடு கொடுக்கலாம். பூச்சி கட்டுப்பாட்டிற்கு மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 150ம் நாளில் பூ மொட்டுக்களை அறுவடை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு: ப.ஓதிச்சாமி, 97894 15898.
thanks to தினமலரின் விவசாயமலர்

விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார். அவருடைய சாகுபடி விபரம்:
               இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை. இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது. இத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6-7 மாதத்திலேயே காய்த்து பலன் தரத்தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்துவிடுகிறது. இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம் 200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம். சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.
                ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக கவாத்து செய்தபின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையை பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம். (100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்தவாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்). இவ்வாறு கவாத்து செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டுவைக்க வேண்டும். இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆறாம் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்தபின் செடிகளை அடியுடன் அப்புறப்படுத்திவிட்டு மறுநடவு செய்யலாம். மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும். ஒவ்வொரு முறை கவாத்து செய்தபிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500-300 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தொடர்புக்கு: கே.பி.எம்.சடையாண்டி, 97913 74087, 98650 78101. 
  thanks to தினமலரின் விவசாயமல

உழவர் மன்றத்தால் உயர்வுபெற்ற விவசாயி


  
                 கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், காளியாபுரம் கிராமத்தில் வசிக்கும் திருவேங்கடம் (94861 34531) தேசிய ஊரக வளர்ச்சி வங்கி மூலம் உழவர் மன்றம் அமைக்கப் பட்டு சாதனை படைத் துள்ளார். அதன் விபரங்கள்:

நோக்கம்: கடன் சம்பந்தப் பட்ட 5 கொள்கைகளை விவசாயிகளுக்கு அறிவிப்பது; அவ்வாறு அறிந்த விவசாயிகள் வங்கிகளின் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து, கிராமத்தின் விவசாயிகளின் தேவைகளை வங்கிகளுக்கு தெரியப்படுத்துவது.

உருவாக்குவது எப்படி: குறைந்தது 10 விவசாயிகளோ அல்லது அதிகபட்சமாக கிராம மக்கள் அனைவருமே உறுப்பினராகலாம். கிராமத்திற்கு ஒரு மன்றம் என்றோ இரண்டு அல்லது மூன்று கிராமங்களுக்கு ஒரு மன்றம் என்றோ உருவாக்கலாம். கிராமத்திற்கு அருகில் இருக்கும் வங்கி கிளையின் சிபாரிசுடன் மன்றம் துவங்குவதற்கான விண்ணப்பத்தை நபார்டுக்கு அனுப்ப வேண்டும். நபார்டு ஒப்புதல் பெற்றபின் மன்றங்கள் வங்கிகளால் கிராம மக்கள் முன்னிலையில் முறையாக துவக்கப்பட வேண்டும்.

மன்றங்களுக்கு நபார்டு அளிக்கும் உதவிகள்: மன்றத் துவக்க விழா மற்றும் அடிப்படை பயிற்சி முகாமிற்கான செலவு; வல்லுனர்களின் கருத்துக்களை அறியக் கூட்டப்படும் கூட்டங்களின் செலவு (ஆண்டிற்கு இருமுறை); ஆண்டு பராமரிப்பு செலவு; மற்ற மாவட்டங்கள், கிராமங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் உள்ள சிறந்த திட்டங்கள் அல்லது தொழில்நுட்பங்களைக் காண மேற்கொள்ளும் கல்விச் சுற்றுலாவிற்கான செலவு.

கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் - நோக்கம்: சிறு, குறு குத்தகை விவசாயிகள், விவசா யம் சார்ந்த பண்ணைத் தொழில் களில் ஈடுபடுபவர்கள், சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பண்ணை சாரா தொழில் செய்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான கடன் உதவி எளிதில் கிடைக்க உதவி செய்வது.

யார் உறுப்பினர் ஆகலாம்: ஒரே கிராம பகுதியைச் சார்ந்தவர்களாகவும் ஒரே மாதிரியாக சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட வர்கள் உறுப்பினராகலாம். ஒருவருக் கொருவர் நன்கு அறிமுகமுள்ளவர்களும் பரஸ்பர நம்பிக்கை கொண்டவர்களும் வங்கிக்கடன் பெற உத்திரவாதம் தரத் தயாராகவும் இருக்க வேண்டும்.

குழுக்களை யார் உருவாக்கலாம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்; உழவர் மன்றங்கள் / உழவர்சங்கங்கள்/பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகள்; விவசாய அறிவியல் மையங்கள் / விவசாய தொழில்நுட்ப நிர்வாக அமைப்பு; அரசு துறைகள் / தனிநபர்கள், விற்பனையாளர்கள்; வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்; இதர கூட்டுறவு அமைப்புகள், நுண் கடன் நிறுவனங்கள், அமைப்புகள்.
நபார்டு மூலமாக விநியோகிக்கப்படும் மத்திய அரசின் மானியங்கள்: வேளாண் விற்பனை உள் கட்டமைப்பு; கிராமிய கிட்டங்கி (குடோன்); குளிர்பதன சேமிப்பு; விவசாய கிளினிக்குகள் மற்றும் வேளாண் வணிக மையங்கள்; கரிக விவசாய இடுபொருட்கள்; பால்பண்ணை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்; ஒருங்கிணைந்த சிறு அசை (ஆடு, முயல்) வளர்ப்பு திட்டம்; பன்றி வளர்ப்புத் திட்டம்; ஆண் எருமைக் கன்றுகள் வளர்ப்புத் திட்டம்; சிறு தொழிற் சாலைகளுக்குதொழில்நுட்ப மேம்பாட்டிற்கான கடன் சார்ந்த மானிய திட்டம்.
-கே.சத்தியபிரபா, உடுமலை.
Thanks to dhinamalarin vivasayamalar

மிளகாய் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.  அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற  மாநிலங்களில் புசேரியம் வாடல் நோய் மிளகாய் பயிரை அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த வாடல் நோய் தமிழகத்தில் சாகுபடி செய்யும் மிளகாய் பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
   இந்த வகை வாடல் நோய் புசேரியம் சோலானி, நெக்ட்டிரியா ஹேமடோகோக்கா ஆகிய பூசணங்களால் உண்டாக்குகிறது. செடியின் எவ்வித வளர்ச்சி பருவத்திலும் இந்நோயின் பாதிப்பு ஏற்படலாம். மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஈரத்தன்மை குறையும் பொழுது, கோடைகாலங்களில் நீர்ப்பாசனம் இல்லாமல் மண் இறுகி விடுவதாலும் இந்நோய் தீவிரமடைகிறது.
   தோட்டத்தில் தாக்கப்பட்ட செடிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாடத்துவங்கும். இந்நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் வெளிர்பச்சை நிறமடைந்து கீழ்நோக்கி தொங்கும். தாக்கப்பட்ட செடிகளின் மேல்  நுனி இலைகள் தளர்ந்து வாடி சரியாக நீர்ப்பாய்ச்சாதது போல் தோற்றமளிக்கும் இந்நோய் தாக்கி முதலில் வாடும் செடிகளின் முதலில் வேர்களில் எவ்வித மாற்றமும் செடிகளின் தண்டுபகுதிகளை நீள்வாட்டில் வெட்டினால் உள்ளே திசுக்கள் பழுப்பு நிறமாக மாறியிருப்பதைக் காணலாம்.
    விவசாயிகள் இந்நோயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றலாம். உழவு செய்து நிலத்தை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தரிசாக விடலாம். ஒரு எக்டருக்கு சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் எனும் பயிர் ஊக்கி பாக்டீரியாவை 2.5 கிலோவை ஐம்பது கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு நிலத்தில் இடவும்
    நோய் தாக்கிய வயலில் இரண்டரை கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது கார்பண்டாசியம் 0.1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து  செடியின் அடிப்பாகத்தில் ஊட்டலாம். நோய் முற்றிய நிலையில் தாக்கப்பட்ட செடிகளையும், செடிக் கழிவுகளையும் எரித்து அழித்து விட வேண்டும். நோயுற்ற வயலில் பயன்படுத்த உழவியல் கருவிகளை பிளீச்சிங் பவுடர் கலந்து நீரில் தொற்று நீக்கம் செய்யவும். மிளகாய் நாற்றுகள் நோயற்ற நாற்றங்கால்களில் வளர்க்கப்படுதல் அவசியம். நோய்க்காரணி ஒருமுறை நிலத்தில் வேரூன்றிவிட்டால் நோயை கட்டுப்படுத்துவது அவசியம். நோய்த் தாக்கிய வயலில் மிளகாயை மீண்டும் பயிரிடக்கூடாது. மேலும் நோய் கண்ட நிலத்தில் தக்காளி, கத்தரி, உருளை இவற்றை பயிரிடுவதைத் தவிர்க்கவும். நெல், மக்காச் சோளம், பருத்தி இவற்றை நீண்டகால சுழற்சியில் கடைபிடிக்கவும்.இந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி மிளகாய் சாகுபடியில் நல்ல விளைச்சலையும், அதிக வருமானத்தையும் பெறலாம்.

மதிப்பு கூட்டுதல்

விவசாய விளை பொருட்கள் மதிப்பு கூட்ட பட்டால் பல மடங்கு லாபத்தை விவசாயி பெற முடியும். ஆகவே மதிப்பு கூட்டுதலில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை சந்தேகங்களை இங்கே பதிவு செய்யலாம்

Sunday, February 02, 2014


உயர் ரக சம்பங்கி விதை கிளங்கு விற்பனை 9787119420

புதினா பயிரிட்டால் அதிக இலாபம்

 உணவு வகைகளின் மணமூட்டுவதற்கு புதினா மிகவும் பயன்படுகிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அமிலத்தன்மையைப் போக்க வல்லதாகும். அரிய மருத்துவ குணம் கொண்டதாகும். இதுபோக, புதினாவின் தண்டு பகுதிலியிருந்தும் ஒரு வகை வாசனை எண்ணை எடுக்க பயன்படுகிறது. புதினாவில் பெயர் சொல்லும் வகையில் எந்த ரகமும் கிடையாது. ஆனால், மென்தா சிட்ரோட்டா, மென்தா ஸ்பைக்கேட்டா, மென்தா பைபிரேட்டா என்ற மூன்று வகை புதினாக்கள் எல்ல இடங்களிலும், சாகுபடி செய்ய உகந்ததாக உள்ளது. புதினா நன்றாக வளர நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலம் மற்றும் அதிக்க்க் கனிமச்சத்துக்கள் கொண்ட அமிலநிலம் மிகவும் ஏற்றதாகும். வெப்பமான பகுதியும், மித வெப்பமான பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்
.
     பதியம் போட்ட குச்சிகளையோ அல்லது வேர்விட்ட குச்சிகளையோ ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பின் ஹெக்டேருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 10 கிலோ இட வேண்டும். முன்னதாக நிலத்தில் 10 டன் தொழு உரமிட்டு நன்றாக உழுது விட வேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைச்சதை இரண்டு முறை பிரித்துப் போட வேண்டும். வேர்விட்ட குச்சிகளை நட்டவுடன் உடனடியாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்பு வாத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
    தேவைக்கேற்ப களை எடுத்து , மண் அணைக்க வேண்டும்.நடவு செய்த 5 மாதம் கழித்து முதல் அறுவடை செய்யலாம். முதற்கட்டமாக புதினாவில் தண்டு முனைப்பகுதிகளை வெட்டுவதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. 5 மாதம் கழித்து அடுத்த கட்டமாக அறுவடை செய்ய வேண்டும். 4 வருடத்திற்கு 5 மாதம் இடைவெளியில் அறுவடை செய்து கொண்டிருக்கலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 15 முதல் 20 டன் வரை தண்டு  மற்றும் இலை மகசூல் கிடைக்கும். மேலும் ஒரு ஹெக்டேரில் 50 முதல் 75 கிலோ வரை புதினா எண்ணெய் கிடைக்கிறது.

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – டி வி இராதாகிருஷ்ணன்

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.
ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.
ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.
ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)
(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)
இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.
இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)
இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.
அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.
இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.
இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.
நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.
வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.
இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இன்று..
நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.
65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.
மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.
மரபணு மாற்று..
உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?
முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.
விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.
மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.
இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.
விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..
கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது

Saturday, February 01, 2014

மருத்துவப் பயன் கொண்ட வெள்ளரி சாகுபடி முறைகள்

உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் வெள்ளரி சாகுபடி 4 ஆவது இடத்தை வகிக்கிறது. மருத்துவப் பயன் கொண்ட வெள்ளரி சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வெள்ளரி பண்டைக்காலம் முதல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து கிரேக்கர்கள், ரோமானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கு பரவிய வெள்ளரி, உலகம் முழுவதும் பரவி உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் 4 ஆவது இடத்தை வகிக்கிறது. வெள்ளரி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுவதற்கு காரணம் அதன் மருத்துவக் குணங்களாகும்.
மருத்துவப் பயன்கள்: உணவே மருந்து என்ற தத்துவத்திற்கு வெள்ளரி உன்னத எடுத்துக்காட்டு. 95 சதவீத நீர் சத்துடன் சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
வெள்ளரியில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. லேரிசிரிசினால். பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற மூன்று லிக்கன்கள் பலவகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன.
வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி சீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும்.
வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது. இதில் ஸ்டிரால்கள் என்ற கூட்டுப்பொருள்கள் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் வீக்கம், கருவளையங்களைப் போக்கவும், சிறு நீரகக் கற்களைக் கரைக்கவும் வெள்ளரி உதவுகிறது. கொழுப்பில்லாத, கலோரி குறைவான உணவாதலால், எடையைக் குறைக்க இது மிகவும் ஏற்ற உணவு.
சாகுபடி முறைகள்: கோ 1, ஜப்பானிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி ரகங்கள் பயிரிடலாம். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச்சத்து நிறைந்த மணற்சாரி வண்டல் மண் மிகவும் இதற்கு ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கலாம். ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களும் விதைப்பதற்கு ஏற்ற பருவம்.
விதைப்பு: நிலத்தை நான்கு முறை நன்கு உழவேண்டும். 5 அடி இடைவெளியில் நீளமான கால்வாய்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற ரசாயன உயிர்ப் பூசணக் கொல்லி மருந்தையோ அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற ரசாயனப் பூசணக் கொல்லி மருந்தையோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். கால்வாயின் பக்கவாட்டில் 2 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின் குத்துக்கு 2 செடிகள் இருக்குமாறு களைத்து விட வேண்டும். விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்: ஏக்கருக்கு 16 மெட்ரிக் டன் தொழு உரத்தை அடியுரமாக இட வேண்டும். பின் விதைத்த 30 தினங்களில் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 30 கிலோ யூரியாவை மேல் உரமாக இடவெண்டும். 2 அல்லது 3 முறை களைக் கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: பழ ஈ யினால் பாதிக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழித்து விட வேண்டும். பழ ஈக்களின் எண்ணிக்கை வெப்பமான நாள்களில் குறைவாகவும், மழை பெய்யும் பருவத்தில் அதிகமாகவும் இருக்கும். ஆகவே மழைக் காலங்களில் காய்ப் பருவம் வராத நிலையில் விதைப்பு தேதியை நிர்ணயித்து விதைக்க வேண்டும். நன்கு உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிப்பதன்மூலம் பழ ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.
சாம்பல் நோய் தாக்குவதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு அரை கிராம் டினோகரப் அல்லது கார்பண்டசிம் கலந்து தெளிக்கலாம்.
வெள்ளரி பயிருக்கு நச்சாகிப் பயிருக்கு தீங்கு தரக்கூடிய லிண்டென் 1.3 சதவீத தூள், தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. 80 முதல் 90 நாள்களில் ஏக்கருக்கு 4,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஆகவே வெள்ளரி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய பருவங்களில் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக மகசூலும், உன்னத லாபமும் தருவதுடன், சமூகத்திற்கும், மருத்துவப் பயன்மிக்க வெள்ளரியை அதிக உளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றார் அவர்.