பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக, தொடர்ச்சியாக வேதியியல் உரங்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.
சிறிதளவாவது இயற்கைக்கு மாறும் விவசாயிகள் மண்ணை உழுது, இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், புண்ணாக்கு கரைசல், கீரைச்செடிகளை போட்டு பயிர் செய்கின்றனர். இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.விவசாயி முருகன் கூறுகையில், ""வெள்ளைப்பூண்டின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.இதனால் வாழை, கரும்பு, தென்னை உட்பட பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.