Tuesday, November 03, 2015

மா இஞ்சி மாண்பு

மா இஞ்சி என்ற பழமையான வகை இஞ்சியில் உள்ளது. மா இஞ்சி என்றால், மாங்காய் இஞ்சி ஆகும். சாதாரண இஞ்சியைப் போன்றே மா இஞ்சி வளமையாக உள்ள ஓர் அரிய தாவரம். ஒரு மீட்டர் உயரம் அளவுக்கு வளர வல்லது. இதன் பசுமையான நீண்ட இலைகள், மிக்கவாறும் ஜதைகள் பலவாகக் காணப்படுகின்றன. இஞ்சிப் பகுதி பத்து சென்டி மீட்டர் நீளம் வரை தோன்றும். உள் பகுதி மஞ்சள் நிறமாகக் காணப்படும். கணுக்கள் ஆங்காங்கு நிரவியிருக்கும். நிழல் பாங்கான இடங்களில் இது சிறப்பாகப் பயிரிடப்படுகிறது. எனினும் மற்றைய வெளி இடங்களிலும் இது நன்கு வளரக் கூடியதே. இதன் மட்ட நிலத் தண்டிலிருந்து பச்சை மாங்காயின் நறுமணம் வருவதாலேயே இதற்கு மா இஞ்சி (மாங்காய் இஞ்சி) என்ற மாசற்ற பெயர் உண்டானது.
சாதாரண இஞ்சியில் உள்ள கார அளவுக்கு, இந்த மா இஞ்சியில் காரம் இருப்பதில்லை. மட்ட நிலத்தண்டு வெளித் தோற்றத்தில் சாதாரண இஞ்சியைப் போன்றே இது காணப்படும். வெப்பமான மண்டலங்களிலே, தமிழ்நாட்டிலும், வியாபார முறையில் இது பயிரிடப்படுகிறது. உணவுப் பண்டங்களுக்கு வாசனை ஏற்படுத்துவதற்காகவே இது பெரிதும் பயனாகிறது. பிரதானமாக இது ஊறுகாய் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
நாவில் இட்டால் இது மிகவும் சுவையாக இருக்கும். சாதாரண இஞ்சியில் நார்கள் அதிகமாக உள்ளன. ஆனால், மா இஞ்சியில் நார் பாகம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. பயன்பாடுகளில் ஏறத்தாழ நான்கு மாதங்கள் வரை இது கேடுறாமல் இருப்பதால், அக்கால அளவுக்கு இதனைச் சேமித்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
சித்தா, ஆயுர்வேதா ஆகிய பழமையான மருத்துவ முறைகளிலே ஆஸ்துமா, ஜுரம், தோல் வியாதிகள் ஆகியவற்றை அகற்றவும், மலத்தை இளக்கவும் மா இஞ்சி பெரிதும் பயனாகிறது. திப்பிலியுடன் சேர்ந்து அரவையான மா இஞ்சி, மூலநோயைக் குணப்படுத்தவும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் உபயோகமாகிறது. யுனானி மருத்துவ முறையில் அதீத உடற்சூட்டை மட்டுப்படுத்துவது, குடற்புழுக்களை மாய்ப்பது, இருமலைக் கட்டுப்படுத்துவது, இரத்தக் கொழுப்பைக் குறைப்பது, சிறுநீர்த் தொல்லைகளைச் சீராக்குவது முதலானவற்றுக்கு மா இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. மா இஞ்சியின் மாண்பு மகத்தானது என்பதில் இனியும் ஐயம் உண்டோ?
- எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.

Advertisement

அங்கக மேலாண்மை - விவசாயியின் அனுபவம்

நெல் சாகுபடி - அங்கக மேலாண்மை - விவசாயியின் அனுபவம்: எந்த வகை வேளாண்மைக்கும் ஆதாரமாக இருப்பது மண்வளம் தான். மண் வளமாக இருக்க மண்புழுக்களை மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத பலகோடிக்கணக்கான நுண்ணுயிர்களும் தேவை. பல தானிய விதைப்பு என்ற முறையை விவசாயி செயல்படுத்தி பல தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, சோளம் இவற்றில் தலா 2 கிலோவும், (எண்ணெய் வித்துக்களில் எள், கடலை, கடுகு, ஆமணக்கு இவற்றில்) தயாரிக்கலாம். சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி இவைகளில் தலா 2 கிலோவும், வாசனை பயிர்களான சீரகம், வெந்தயம் இவற்றில் தலா 1 கிலோ வீதம் கலந்து விதைத்து தண்ணீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். பூக்கத் துவங்கும் போது தண்ணீர் தேக்கி வைத்து டிராக்டர் கொண்டு உழுது மடக்கி தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் 4 முதல் 6 நாட்கள் வைத்தால் தழைகள் மக்கி உரமாக மாறும். பின்னர் வழக்கமாக நாற்று நடுதல் வேலைகளை செய்யலாம்.
நெல் நாற்று நட்ட 20 மற்றும் 40ம் நாட்களில் இருமுறை பஞ்சகவ்யம் அல்லது ஜீவாம்ருதம் தெளிக்கிறார் விவசாயி. பயிர் வளர்ச்சி குறைவாக இருந்தால் மட்டும் பயிர் ஊக்கியாக தேபோர் கரைசலை தெளிப்பதுண்டு. இது தவிர, முன் தடுப்பாக பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும். எருக்கு, ஆவாரை, அரளி, துத்தி, நொச்சி, பப்பாளி போன்றவற்றால் தலா 2 கிலோ வீதம் துண்டுகளாக நறுக்கி 10 லிட்டர் பசு கோமியத்தில் ஊறப்போட்டு ஒரு பிளாஸ்டிக் வாளியில் இட்டு, வெயில் படாமல் வைக்க வேண்டும். 7வது நாள் நன்கு வடிகட்டி 1 லிட்டர் கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தார். மேலும் விபரங்களுக்கு கோமதி நாயகம், 18, உச்சி மாகாளியம்மன் வீதி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி : 0463 - 623 3235.
பறவைகள் அங்கக வேளாண்மைக்கு ஓர் உற்ற துணை: ஏறக்குறைய 60 வகையான நீர்பறவைகள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நெல் வயல்களில் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இப்பறவைகள் நெற்பயிரைத் தாக்கி அழிக்கும் பூச்சிகளை பெருமளவு உணவாக உட்கொள்கின்றன. புளுமட்டிஸ் என்னும் பறவை ஓராண்டில் சுமார் 5000 இனம் புழுக்களையும், 5 இலட்சம் இலைக் கொசுக்களையும் உணவாக உட்கொள்கின்றது. பறவைகளின் எச்சத்தில் அதிக அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் உள்ளன.
எனவே பறவைகளின் எச்சங்களை அங்கக உரமாகப் பயன்படுத்தி வேளாண்மை செய்வதால் அங்கக விவசாயிகள் பயனடைவர். விவசாயிகள் பறவைகள் கூடும் மரங்களை பாதுகாத்திட வேண்டும். பறவைகளைப் பாதுகாப்பதில் பயிர் சத்துடன் பூச்சித் தொல்லையும் குறைப்பதற்கு வழி வகுக்கும். தகவல் : ம.மகேந்திரன், சலீம்அலி, பறவை மற்றும் இயற்கை வரலாற்று மையம், கோயம்புத்தூர் - 641 108.
திருந்திய நெல் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நுட்பங்கள்: தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரியஒட்டு இரகங்களை பயன்படுத்துதல். குறைந்த விதையளவு - 2 கிலோ ஒரு ஏக்கருக்கு. விதை நேர்த்தி செய்தல். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) சுருள்பாய் நாற்றங்கால். நடவு வயலை துல்லியமாக சமன் செய்தல். இளம் வயது (14 நாட்கள்) நாற்றுகளை பயன்படுத்துதல்.
மார்கர் கருவி மூலம் சதுர முறையில் அதிக இடைவெளியில் (22.5 X 22.5 செ.மீ) நடவு செய்தல். குத்துக்கு ஒரு நாற்றை பயன்படுத்துதல். களைக்கருவி (கோனோ வீடர்) மூலம் களை நிர்வாகம் மேற்கொள்ளுதல். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுதல். பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து உரமிடுதல். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

ஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம்

ஏலச்செடிகளுடன் காளான் வளர்ப்பு என்ற கொள்கையை பரிசோதித்து வெற்றி பெற்றுள்ளார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன். இது பற்றி அவர் கூறுகையில், ஏலத்தோட்டங்களில் நிலவும் காலச் சூழ்நிலையையும் சீதோஷண நிலைகளைப் பயன்படுத்தி குடில்கள் அமைக்காமல் இயற்கையில் ஏலச்செடிகளுடன் காளான் வளர்த்து ஏல விவசாயத்தை மிகவும் லாபகரமாகவும், ஆர்கனிக் முறைக்கு மாற்றும் முயற்சி இது. இம்முறையை பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பலவகை நன்மைகளை தருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் பன்மடங்காக உயர்கிறது. காளான் அறுவடை செய்தப்பின் கிடைக்கும் காளான் மைசீலியக் கழிவுகள் செடிகளுக்கு அடியில் இருக்கும் போது அது அழுகல் நோயை உண்டாகக்கூடிய பித்தியம், மற்றும் ரைசோகாட்டலின் போன்ற பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தி செடிகளை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதுடன் அதிக அளவு மகசூலையும் கொடுக்கிறது.
பல்வேறுப்பட்ட இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததின் விளைவாக மண்ணில் ஏற்பட்டுள்ள இரசாயன மாற்றத்தையும் மண்ணில் குவிந்துள்ள பயன்படுத்திய இரசாயனங்களையும் உறிஞ்சி மண்ணின் தன்மையை தாவர வளர்ச்சிக்கேற்ற வகையில் மாற்றுகிறது. அதேபோல் பல வீரியம் மிக்கப் பூசனக் கொல்லிகளை ஏலச் செடிகளுக்கு பயன்படுத்துவதால் அது ஏலத்தோட்டங்களிலுள்ள அனைத்து வகை நன்மை செய்யும் பூஞ்சைகளையும் அழித்து விடுவதால் மண்ணில் நடைபெற வேண்டிய மினரல் (சத்துக்களின்) சுழற்சி தடைபட்டு மண்ணின் உயிர்தன்மை இழந்து வருகிறது.
பேராசிரியரின் இப்புதுமை திட்டத்தை பயனாளிகளின் கைகளுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் கிளீன் மற்றும் கிரீன் எண்விரான்மெண்ட் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. சோதனை முறையாக சுமார் ஒரு ஏக்கர் ஏலப்பயிருடன் காளான் வளர்ப்பை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செய்து வருகிறது. இம்முறை பற்றி பிற தகவல்களுக்கு 94863 26193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- டாக்டர் கு.ராஜேந்திரன்,
பேராசிரியர் தாவரவியல் துறை,
சரஸ்வதி நாராயணன் கல்லூரி,
மதுரை.

சின்ன வெங்காயத்தில் அதிக லாபம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்திலிருக்கும் விவசாயி ராஜேஸ்குமார் 60 சென்டு நிலத்தில் 70 நாட்களில் 90 ஆயிரம் ரூபாய் வரை லாபம் எடுத்திருக்கிறார். சின்ன வெங்காயத்திற்கு சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி வரையும், குறுவைப்பட்டத்திற்கு ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை.
குறுவைக்கு புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும் குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்து விட்டு உழவித்த அன்றே 10 அடி நீளம், 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்திற்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால் பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வெங்காயத்திற்கு விலை இல்லாத வேளையில் பட்டறை அமைத்து சேமித்து வைக்கலாம். கிழக்கு மேற்காகத்தான் பட்டறை அமைக்க வேண்டும். மர நிழலில் பட்டறை அமைத்தால் நல்லது. தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் செங்கல் வைத்து அடுக்கி, அதன் மேல் இரண்டரை அடி அகலத்தில் தேவைக்கேற்ற நீளத்தில் அகத்திக் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக அடுக்க வேண்டும். அதன் மீது காய்ந்த நாற்று, தென்னங்கீற்று அல்லது பனை ஓலையைப் போட வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்த உடனேயே பட்டறையில் வைக்க கூடாது. அறுவடை செய்த 45 நாட்கள் களத்திலேயே காயவிட்டு முதல் நாள் முக்கால் அடி, 2வது நாள் 2 அடி என கொஞ்சம் கொஞ்சமாக எடை ஏற்ற வேண்டும். 2 அடி உயரம் வரை மட்டமாக அடுக்கி விட்டு 2 அடிக்கு மேல் கூம்பு வடிவில் அடுக்க வேண்டும். பட்டறையில் அடுக்கி முடித்த பிறகு, வெங்காயத்தின் மீது பனை ஓலை அல்லது சாக்கு போட்டு மூட வேண்டும். இந்தப் பட்டறையில் 7 மாதங்கள் வரை வெங்காயத்தைச் சேமித்து வைக்கலாம். தொடர்புக்கு: ராஜேஷ்குமார், அலைபேசி: 99527 11002.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

ஏற்றுமதிக்கேற்ற முருங்கை சாகுபடி:

கடலூர் மாவட்டம், அண்ணா கிராமம் ஒன்றியம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள ஒறையூரைச் சேர்ந்த அய்யப்பன் பல ஆண்டுகளாக முருங்கை சாகுபடி செய்கிற அனுபவத்தை விவரிக்கிறார். செடி முருங்கையை பொறுத்தமட்டில் விதைகளை அவரே தயார் செய்கிறார். தரமான மற்றும் அதிகப்படியான காய்கள் கொண்ட மரத்தை தேர்வு செய்து அதில் அடிக்கிளையில் காய்க்கும் காய்களை விட்டு விட்டு பிற காய்களை முற்ற விட்டு, நன்கு காயவைத்து நல்ல வீரியமான விதைகளைப் பிரித்து எடுக்கிறார். மண்புழு உரத்தை மண்மணலோடு கலந்து பாக்கெட் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு 2 விதைகளை விதைத்து, 15-20 நாட்களுக்குள்ளாக எடுத்து செடியை நட்டு விடுகிறார். நிலத்தை உழுது சமப்படுத்தி 8 அடிக்கு 6 அடி இடைவெளியில் 1 அடி ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, மேல் மண்ணால் மூடி 2 செடிகளை நட வேண்டும்.
முருங்கைக்கு பொதுவாக அதிகமாக தண்ணீர் தேவை இருக்காது. வாரம் ஒருமுறை 2 மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் போதும். உரம் மருந்து போன்றவற்றையும், டிரிப் மூலமாகவே கொடுத்திடலாம். செடி வெச்சு 4 மாதம் கழித்து டி.ஏ.பி.யை செடிக்கு 100 கிராம் அளவுக்கு செடியைச் சுற்றி குழியைப் பறித்து வைக்க வேண்டும். 19:19:19 என்ற கலப்பு உரத்தை ஏக்கருக்கு 2 கிலோ அளவில் வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கனும்.
பூ எடுக்கும் வரைக்கும் ஈரத்தன்மை அதிகமாக இருக்கக் கூடாது. பூக்கும் தருணத்தில் சைட்டோசைம் இலைவழி திரவத்தை கொடுக்கனும். பூ பூக்கறதுக்கும், காய்ப்பிடிப்பதற்குமான மருந்துகளை 15 நாள் இடைவெளியில் அடிச்சிட்டே வரனும். காய்ப்புழுவிற்கு இமாமெக்டின் பென்சோயேட் மருந்தை சரியான நேரத்தில் அடிக்கனும். சொட்டுநீர்ப்பாசனம், வேர்வழி உரம், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச்சத்து உரங்கள் பயோ ஆர்கானிக்ஸ் ஆகியவற்றை கொடுப்பதால் தொடர் விளைச்சலுக்கும், பசுமை மாறா காய்களை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதற்கு உண்டான வெற்றி சூத்திரங்கள் என குறிப்பிடுகிறார் அனுபவ விவசாயி. மேலும் விபரங்களுக்கு : சி.அய்யப்பன், ஒறையூர். அலைபேசி: 93676 46167.

பட்டுக்கூடு உற்பத்தியில் அசத்தும் மதுரை விவசாயி

மதுரையில் பட்டுப்புழு வளர்ப்பு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. நெல், கரும்புக்கு புகழ்பெற்ற சோழவந்தானில் மாற்றுத்தொழிலாக மன்னாடிமங்களம் விவசாயி ஜி.முருகன், பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். பாரம்பரியமாக நெல், கரும்பு, தென்னை, வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த முருகனுக்கு, பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.
முருகன் கூறியதாவது: நெல், கரும்பு, தென்னை, வாழைக்கு தண்ணீர் அதிகம் தேவை. சோழவந்தானில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. ஆனால் விவசாயப்பணிக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அமலானதில் இருந்து விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதன் காரணமாகவே மாற்றுத்தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டது. எனினும் பலர் தயங்கினர்.
நான், துணிச்சலுடன் களத்தில் இறங்கினேன். விளைவு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இளம் புழு வளர்ப்பு மையம் உள்ளது. இங்கிருந்து "டபுள் ஹைபிரிடு' ரகத்தை சேர்ந்த பட்டுப்புழுக்கள் வாங்குகிறேன். மஞ்சள் நிற பட்டுக்கூடு, வெள்ளை நிற பட்டுக்கூடு என இரு வகை உண்டு. வெள்ளை கூடு ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தலைமுடி அளவு மட்டுமே புழுக்கள் இருக்கும். இறுதியாக பத்தாயிரம் மடங்கு வளர்ச்சி பெறும்.
பட்டுப்புழுக்களுக்கு முக்கிய உணவு "வி1' இனத்தை சேர்ந்த மல்பரி இலை. இச்செடியை நடவு செய்து 53 வது நாளில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பலன் தரும். நெல் விவசாயத்தில் அதிகபட்சம் மூன்று போக விளைச்சல். பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மூலம் பட்டுக்கூடு ஆண்டுக்கு ஐந்து முறை கிடைக்கும். இது ஐந்து போக விளைச்சலுக்கு சமம். மதுரை சமயநல்லூரில் மத்திய பட்டு வாரியம் மூலம் மானியத்துடன் கூடிய வெள்ளை நிற பட்டுப்புழு வளர்ப்பில் இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன்.
சொந்த நிலத்தில் மூன்று ஏக்கரில் தரமான மல்பரி செடிகளை வளர்க்கிறேன். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகள் புழுக்களுக்கு இலை வைக்க வேண்டும். ஒரு கூட்டின் எடை 2 கிராம் வரை இருக்கும். 45 நாட்களுக்கு ஒரு முறை 250 கிலோ வரை பட்டுக்கூடு கிடைக்கும். 100 சதுர அடி பரப்பளவில் வளரும் புழுக்கள் படிப்படியாக 4 ஆயிரம் சதுர அடிக்கு பரவும். ஷெட் அமைக்கவும் மானியம் உண்டு. முறையாக பராமரித்தால் ஆண்டுக்கு பத்து முறை பட்டுக்கூடுகள் கிடைக்கும் என்றார். தொடர்புக்கு 94431 09451.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

Friday, January 30, 2015

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சிறப்பு வானொலி



தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 107.4 என்கின்றஅலைகற்றில் விவசாய வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு வானொலி நிலையத்தைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே அமைத்துள்ளது.  இந்நிலைய நிகழ்ச்சிகள் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மே 2012 முதல் செயல்பட்டு வருகிறது.  சுமார் 10,000 விவசாயக் குடும்பங்கள் இந்நிகழ்ச்சியில் பயன்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலைய நிகழ்ச்சிகள் வேளாண்மை, மீன்வளத்துறை, கால்நடைத்துறைமற்றும் தோட்டக்கலைத்துறை போன்றமுக்கிய விவசாயப் பகுதிகளைச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறது.  பட்டுப்பூச்சி வளர்ப்பு, பால்பண்ணை பராமரிப்பும் நிர்வாகமும், தென்னைக்கேற்ப சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண்மை, மழைநீரில் வேற்க்கடலை வேளாண்மை ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு சில முக்கய சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும், கேள்வி பதில் நேர்க்கானல் நிகழ்ச்சிகள், அன்றாட சந்தை மற்றும் வானொலி தகவல் அறிக்கைகள். இந்நிலையத்தில் வெளியிடுகின்றனர். விவசாயிகளுக்கு சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுச் செய்திகளைத் தொகுத்துவழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் உரையாடலை agritech.tmu.ac.in/ community-radio/spl-routine-Program.html என்றவலைதள முகவரியில் அனைவரும் கேட்டு மற்றும் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையத்தை தொடர்பு கொள்ள 0422-6611383 என்றஎண்ணை தொடர்பு கொண்டு பங்கேற்க்கலாம்.இந்தவானொலித் தொடர்பு முறையை ஒரு முன்னோடியாகக் கருதி தொழில், சுற்றுபுறச் சூழல், கல்வி, குடும்ப நலம், சுகாதாரம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகள் பொருளாதார நிலையைக் கருதிக் கூட்டாக அல்லது தனியாகவோ வானொலி நிலையங்களை அமைத்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் பாடுபட முனையளாம். தபால் மூலம் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொள்ள:
Director of Extension Education
TNAU,CBE  641 003
மின்னஞ்சல் – dme@tnau.ac.in